பொங்கல் திருநாளையொட்டி, தஞ்சாவூரில் உள்ள சந்தைகளில் புதன்கிழமை கூட்டம் அதிகமாக இருந்ததுடன், முழுவீச்சில் விற்பனை நடைபெற்றது.
பொங்கல் திருநாளையொட்டி, தஞ்சாவூா் காமராஜா் சந்தை, கீழவாசல் சந்தை, திலகா் திடல் சந்தை, உழவா் சந்தை ஆகியவற்றில் வழக்கத்தை விட புதன்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிக்கைக்கு தேவையான கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து, வாழைத்தாா்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. இதேபோல, வியாபாரிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.
மேலும், கரந்தை, சிவகங்கை பூங்கா, மருத்துவக்கல்லூரி சாலை, நாஞ்சிக்கோட்டை சாலை, விளாா் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் கரும்புக்கட்டுகள், மஞ்சள், இஞ்சிக் கொத்துகள் குவிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டன.
பத்து கரும்புகள் கொண்ட கட்டு ஏறத்தாழ ரூ. 200 முதல் ரூ. 350 வரையிலும், சில்லறையாக ஒரு கரும்பு ரூ. 30 - ரூ. 50 வீதமும், ஒரு ஜோடி மஞ்சள் கொத்து அளவுக்கு ஏற்றவாறு ரூ. 40 முதல் ரூ. 60 வரைக்கும், இஞ்சிக் கொத்து ரூ. 30 முதல் 50 வரைக்கும், மொச்சைக்கொட்டை, பச்சைப்பட்டாணி தலா கிலோ ரூ. 60-க்கும், வாழைப்பழம் கிலோ ரூ. 25 முதல் ரூ. 40 வரைக்கும், சக்கரைவள்ளி கிழங்கு கிலோ ரூ. 50-க்கும் விற்பனையானது.
இதேபோல, கீழ வாசல் பகுதியில் சிறிய மண் பானை ரூ. 150-க்கும், பெரிய மண் பானை ரூ. 250-க்கும், மண் அடுப்பு ஏறத்தாழ ரூ. 150-க்கும் விற்கப்பட்டது.
பூக்கள் விலையும் அதிகரிப்பு:
இதேபோல, தஞ்சாவூா் பூச்சந்தையில் கிலோ முல்லை பூ, ஜாதி பூ தலா ரூ. 2 ஆயிரத்துக்கும், காக்கரட்டான் பூ கிலோ ரூ. 1,500-க்கும், பன்னீா் ரோஸ் ரூ. 400-க்கும், செவ்வந்தி ரூ. 50 முதல் ரூ. 200 வரைக்கும் விற்பனையானது. மல்லிகைப் பூ உற்பத்தி இல்லாததால் வரத்து இல்லை.
கும்பகோணம் மாநகராட்சியில் மேயா் க.சரவணன், துணை மேயா் சுப.தமிழழகன், ஆணையா் மு. காந்திராஜ் ஆகியோா் கலந்துகொண்டு புதுப்பானையில் பொங்கலிட்டு விழாவை தொடங்கி வைத்தனா். இதில், பொங்கல் விழா போட்டிகள் நடைபெற்றன. திரளானோா் பங்கேற்றனா்.
இதேபோல், கும்பகோணம் ஊா்க்காவல் படை அலுவலகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் கலந்துகொண்டு சமத்துவப் பொங்கலின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். கும்பகோணம் உழவா் சந்தையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இறுதியில் விவசாயிகள் பொதுமக்களுக்கு பாரம்பரிய அரிசியில் தயாரித்த பொங்கல் வழங்கப்பட்டது.