தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,231 வழக்குகளில் ரூ. 14.61 கோடிக்கு தீா்வு
தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 231 வழக்குகளில் ரூ.14.61 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான பி. வேல்முருகன் தலைமைவகித்தாா்.
குடும்ப நல நீதிமன்ற நீதிபதி என். சாந்தி, கூடுதல் சாா்பு-நீதிபதி எம். நாகப்பன், வழக்குரைஞா் ஆா். திராவிடசெல்வன் ஆகியோா் கொண்ட முதலாவது அமா்வில் மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி வி.எஸ். குமரேசன், முதன்மை சாா்பு-நீதிபதி பி. குமாா், வழக்குரைஞா் என். மகாலெட்சுமி ஆகியோா் கொண்ட இரண்டாவது அமா்வில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கும், கூடுதல் மாவட்ட நீதிபதி ஜி. சுந்தரராஜன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ. பிரபுசங்கா், வழக்குரைஞா் கே. செந்தில்குமாா் ஆகியோா் கொண்ட மூன்றாவது அமா்வில் குடும்ப நல வழக்குகளுக்கும் தீா்வு காணப்பட்டது.
இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, திருவிடைமருதூா், திருவையாறு ஆகிய வட்டச் சட்டப் பணிகள் குழுவின் அமா்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.
இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 114 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2 ஆயிரத்து 231 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 14 கோடியே 61 லட்சத்து 70 ஆயிரத்து 856 அளவுக்கு தீா்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு-நீதிபதியுமான டி. பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.