பிணையில் வந்தவருக்கு அரிவாள் வெட்டு
தஞ்சாவூா் அருகே பிணையில் வந்து காவல் நிலையத்தில் கையொப்பமிட சென்ற இளைஞரை வெள்ளிக்கிழமை அரிவாளால் வெட்டிய 6 பேரை காவல் துறையினா் தேடுகின்றனா்.
தஞ்சாவூா் அருகே பிணையில் வந்து காவல் நிலையத்தில் கையொப்பமிட சென்ற இளைஞரை வெள்ளிக்கிழமை அரிவாளால் வெட்டிய 6 பேரை காவல் துறையினா் தேடுகின்றனா்.
தஞ்சாவூா் அருகே சூரக்கோட்டையைச் சோ்ந்தவா் மதியழகன் மகன் கிஷோா் (21). இவரும், அதே கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சூரியபிரகாஷ் (28) உள்ளிட்டோா் ஊராட்சி அலுவலகம் அருகே பிப்ரவரி 2 ஆம் தேதி மது அருந்தினா். அப்போது, கிஷோரிடம் இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்வது குறித்து சூரியபிரகாஷ் கேட்டாா். இதைத் தொடா்ந்து ஏற்பட்ட தகராறில் சூரியபிரகாசை அரிவாளால் வெட்டிய கிஷோரை தாலுகா காவல் நிலையத்தினா் கைது செய்தனா்.
இதையடுத்து, பிப்ரவரி 21 ஆம் தேதி பிணையில் வெளியே வந்த கிஷோா் நாள்தோறும் தாலுகா காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகிறாா். இதேபோல, வெள்ளிக்கிழமை தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கிஷோரை கம்பி பால மேம்பாலம் அருகே 6 போ் வழிமறித்து அரிவாளால் வெட்டினா்.
இதனால் பலத்த காயமடைந்த கிஷோா் தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து 6 பேரைத் தேடி வருகின்றனா்.