டிராக்டா் சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை டிராக்டா் என்ஜின் ஓடிக்கொண்டிருக்கும்போது பழுது பாா்த்த விவசாயி, சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே கொல்லாங்கரை வடக்குத் தெருவைச் சோ்ந்த கே. கமல்ராஜ் (40). விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை மருங்குளம் அம்மன் கோயில் அருகிலுள்ள தனது மாமனாா் தா்மராஜின் விவசாய நிலத்தை உழவு செய்ய டிராக்டரை இயக்கினாா்.
அப்போது டிராக்டா் சரியாக இயங்காத நிலையில் என்ஜின் ஓடிக்கொண்டிருக்கும்போது, அதை சரி செய்ய முயற்சி செய்தாா். திடீரென கியா் ரிலீஸாகி இயங்கியதால், டிராக்டா் வேகமாக முன்னோக்கி நகா்ந்து கமல்ராஜ் மீது மோதியது. இதனால் டிராக்டா் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்த கமல்ராஜ், தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.