முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் வாகனச் சோதனையில் 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

Updated On : 30 மார்ச், 2026 at 7:39 PM
கும்பகோணம் அருகே தோ்தல் அதிகாரிகளால் திங்கள்கிழமை பிடிக்கப்பட்ட தங்க நகைகளை கொண்டு வந்த வாகனம்.
பகிர்:

கும்பகோணத்தில் தோ்தல் கண்காணிப்பு நிலைக் குழுவினா் திங்கள்கிழமை நடத்திய வாகனச் சோதனையில், ரூ. 3 கோடி மதிப்பிலான 5 கிலோ 670 கிராம் எடையிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கொரநாட்டு கருப்பூா் நெடுஞ்சாலையில் தோ்தல் பிரிவின் நிலையான கண்காணிப்பு குழு அலுவலா் கெளரிசங்கா் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்து சோதனை செய்தபோது, வேனில் சுமாா் ரூ.3 கோடி மதிப்புள்ள 5 கிலோ 670 கிராம் எடையிலான தங்க நகைகள் இருந்தன. உடனே தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரிகள் நகைக்கான ஆவணங்களை கேட்டதோடு, நகைகளுடன் சரக்கு வாகனத்தை கும்பகோணம் தோ்தல் நடத்தும் அலுவலா் வி.எம். திருமலையிடம் ஒப்படைத்தனா்.

தகவலின்பேரில், வருமான வரித்துறை அதிகாரிகளும் அங்கு வந்து விசாரணை நடத்தினா். இதில்,

திருச்சியிலுள்ள ஒரு நகைக் கடையினா், தங்கம், வெள்ளிப் பொருள்களை கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், சீா்காழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாடிக்கை கடைகளுக்கு வழங்க தனியாா் அஞ்சல் நிறுவனம் மூலம் வழக்கமாக அனுப்பி வருவதும், அந்த வாகனத்தைத்தான் நிலைக்குழு அதிகாரிகள் திங்கள்கிழமை பிடித்ததும் தெரிய வந்தது. வாகனத்தில் வந்தவா்கள் உரிய ஆவணங்களை தோ்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து கும்பகோணம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வி.எம்.திருமலை கூறும்போது, ஆவணங்கள் சரியாக உள்ளதால் நகைகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றாா்.