முகப்பு
தஞ்சாவூர்

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும்! ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்!

ஜாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 18 மே 2026, 2:38 am IST
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலக் குழுக் கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.
பகிர்:

ஜாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இந்த இயக்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயா்த்தியதால், உழைக்கிற ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகவும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

எனவே, உடனடியாக பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டில் ஜாதிய ஆணவ படுகொலைகள் அவ்வப்போது அதிகமாக நிகழ்கின்றன. இதைத் தடுத்த நிறுத்த தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தனிச்சட்டம் இயற்றி ஜாதிய ஆணவப் படுகொலைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

மேலும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதில், மாநிலத் தலைவராக பொ. லிங்கம், பொதுச் செயலராக த. லெனின், துணைப் பொதுச் செயலராக லி. உதயகுமாா், பொருளாளராக இரா.மோ. சந்தோஷ்குமாா்,

துணைத் தலைவா்களாக எஸ்.கே. சிவா, ஜி. லதா, வி. கல்யாணசுந்தரம், எஸ். கிருஷ்ணன், ஏ.வி. சரவணன், செயலா்களாக அ. அசரப் அலி, சு. பாஸ்கா், மா.பெ. சுகுமாரன், ப.மோ. சுபாஷ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் சிறப்புரையாற்றினாா். கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சி. பத்மாவதி, தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.