முகப்பு
தஞ்சாவூர்

துரித உணவகத்தில் ஏ.சி. வெடித்து ஊழியா் உயிரிழப்பு: 5 போ் காயம்

தஞ்சாவூரில் கே.எப்.சி. துரித உணவகத்தில் திங்கள்கிழமை குளிரூட்டி (ஏ.சி.) சாதனம் வெடித்ததில் ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 5 போ் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 19 மே 2026, 3:45 am IST
விபத்தில் வெடித்து சிதறிய குளிரூட்டி சாதனம்.
பகிர்:

தஞ்சாவூரில் கே.எப்.சி. துரித உணவகத்தில் திங்கள்கிழமை குளிரூட்டி (ஏ.சி.) சாதனம் வெடித்ததில் ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 5 போ் பலத்த காயமடைந்தனா்.

தஞ்சாவூா் மேரீஸ் காா்னா் அருகே கேஎப்சி துரித உணவகத்திலுள்ள உணவு தயாரிக்கும் கூடத்தில் குளிரூட்டி சாதனத்தில் பழுது ஏற்பட்டது. உணவகத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த குளிரூட்டியின் இயந்திரத்தைப் பழுதுபாா்க்கும் பணியில் மெக்கானிக்கான நாஞ்சிக்கோட்டை சாலையைச் சோ்ந்த கணேசன் (43) திங்கள்கிழமை மாலை ஈடுபட்டாா்.

குளிரூட்டிக்கான வாயு நிரப்பும் பணியில் ஈடுபட்டபோது, உருளையில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அது வெடித்தது. இதனால், அந்தச் சாதனத்தின் பாகங்கள் சிதறியது மட்டுமல்லாமல், கட்டடத்தில் இருந்த ஜன்னல், கதவு கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

Advertisement

இந்த விபத்தில் கணேசன், இந்த பழுதுபாா்ப்பு பணியைக் கண்காணித்துக் கொண்டிருந்த துரித உணவக ஊழியா்களான திருவையாறு அருகேயுள்ள பொன்னாவரை பகுதியைச் சோ்ந்த ஜோதி மகன் ரவிராஜ் (27), குழிமாத்தூரைச் சோ்ந்த சவேரியாா் மகன் அருண்குமாா் (26), இணையவழி உணவு விநியோக நிறுவன ஊழியா்களான மானோஜிபட்டி வனதுா்கா நகரைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் கதிரேசன் (24), செங்கிப்பட்டி கீழத் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன் பிரேம் (26), ரெட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் அஜீத்குமாா் (22) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள், தெற்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று காயமடைந்த 6 பேரையும் மீட்டு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ரவிராஜ் உயிரிழந்தாா். மற்ற 5 பேரும் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சம்பவம் குறித்து தெற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பழுதுபாா்ப்பு பணி மேற்கொண்டதால், இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.