முகப்பு
திருச்சி

அடுக்குமாடி வீடுகளின் விலை அதிகமாகும்

பத்திரப் பதிவு நடைமுறையில் தமிழக அரசு செய்துள்ள மாற்றத்தின் காரணமாக அடுக்குமாடி வீடுகளின் விலை உயருகிறது.

Updated On : 5 ஜனவரி, 2013 at 8:51 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:24 PM

பத்திரப் பதிவு நடைமுறையில் தமிழக அரசு செய்துள்ள மாற்றத்தின் காரணமாக அடுக்குமாடி வீடுகளின் விலை உயருகிறது.
 அடுக்குமாடி அமையவுள்ள நிலத்தின் மதிப்பில் பத்திரச் செலவு அமைந்த நிலைமை மாறி, தற்போதைய புதிய உத்தரவின்படி, அங்கு கட்டப்படவுள்ள அடுக்குமாடியின் மதிப்புக்கு ஏற்ப பத்திரச் செலவு மேலும் கூடுதலாகிறது.
 நிலம் அல்லது வீடு வாங்கிப் பத்திரப் பதிவு செய்வதற்கு முன்னர் உடன்படிக்கை பத்திரம் எழுதி, அப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவுக்குள் பதிவு செய்து கொள்வதுதான் இதுவரை நடைமுறையாக இருந்து வந்தது.
 ஆனால் இவ்வாறு செய்வது சட்டரீதியாக செல்லாது என்றும், எந்தவகையான உடன்படிக்கை பத்திரங்களாக (அக்கிரிமென்ட்) இருந்தாலும் கட்டாயம் பத்திரப்பதிவுசெய்தாக வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த ஆணை 2012, டிசம்பர் 1 முதல் அனைத்து சார்பதிவகங்களிலும் அமல்படுத்தப்பட்டுவிட்டது.
 இதன்படி அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டுவதற்கு அந்த உரிமையாளருடன் கட்டுநர் மேற்கொள்ளும் பில்டர்ஸ் அக்ரிமென்ட்டை செயல்படுத்தி, கூடுதல் தொகையைச் செலவிட வேண்டிய நிலை கட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
 பத்திரத்தைப் பதிவு செய்யும் போது, கட்டப்போகும் கட்டடம் எனக் குறிப்பிட்டு அதற்கு எவ்வித தொகையும் செலுத்தாமல் பதிவு செய்து வந்தவர்கள், இனி தாங்கள் கட்டப் போகும் கட்டடத்தின் அளவு, அதிலுள்ள அறைகள் போன்றவற்றையும் குறிப்பிட்டு, அதற்கான மதிப்புத் தொகையில் ஒரு சதவிகிதத்தை பத்திரமாகவும், ஒரு சதவிகிதத்தை கட்டணமாகவும் செலுத்த வேண்டும் என்ற நிலைமை அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுநர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
 உதாரணமாக ரூ.10 கோடியில் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் கட்டப்படுகிறது என்றால், வழக்கமாக அரசுக்குச் செலுத்த வேண்டிய பத்திரப் பதிவுத் தொகை மற்றும் கட்டணத்துடன், மேலும் 1 சதவிகிதத்துக்கு பத்திரமும், (ரூ. 10 லட்சம்) 1 சதவிகிதத்துக்கு கட்டணமும் (ரூ.10 லட்சம்) செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
 இவ்வாறு கூடுதலாகத் தொகை செலுத்தும் போது அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலையும் தானாகவே உயரும் என்கின்றனர் பத்திர எழுத்தர்கள். ஏற்கெனவே அரசு அறிவித்த வழிகாட்டி மதிப்பு உயர்வால் கூடுதலாக பத்திரப் பதிவுத் தொகையைச் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.