திருச்சி மத்திய சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம், திருவிடைச்சேரி அருகே கீழபழூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் செல்வராஜ் (60). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இவருக்கு நீண்டகாலமாக மூச்சுத்திணறல், மாரடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் இருந்து வந்தன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு செல்வராஜுக்கு மூச்சுத்திணறலுடன், இருதய வலியும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறை அதிகாரிகள் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து கே.கே. நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கைதி செல்வராஜ் இறந்தது குறித்து மாஜிஸ்திரேட்டும் விசாரணை நடத்த உள்ளார்.