சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றக் கூடாது என திருச்சி மாநகர துணை ஆணையர் வாகன ஓட்டுநர்களிடம் தெரிவித்தார்.
திருச்சி மாநகர காவல்துறை சார்பில் சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் பாலக்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்வதால் ஏற்படும், விபத்துக்களில் விலைமதிப்பில்லா மனித உயிர்கள் பலியாவதை தடுக்கும் வகையிலும், வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் திருச்சி மாநகர காவல் ஆணையர் ஏ.அருண் உத்தரவின்படி இக்கூட்டம் நடைபெற்றது.
மாநகர காவல் துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) பிரபாகரன் கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசியது: சரக்கு ஏற்றும் வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்வது சட்டப்படி குற்றம். எனவே, சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்லக் கூடாது. அதே போல, மனிதர்களை ஏற்றும் வாகனங்களில் சரக்கு ஏற்றக் கூடாது. மீறி ஏற்றிச் சென்றால் காவல்துறையால் வாகனம் பறிமுதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சாலை விதிகளை கண்டிப்பாக பின்பற்றி விபத்தில்லா பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர். மேலும், இதில் வாகன ஓட்டுநர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, உரிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. முன்னதாக, போக்குவரது உதவி ஆணையர் முருகேசன் வரவேற்றார். போக்குவரத்து ஆய்வாளர்கள், போலீஸார், மினிவேன், மினிலாரி போன்ற சரக்கு வாகனங்களின் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.