திருச்சியில் தினமணி கல்விக் கண்காட்சி நிறைவு
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் சார்பில் திருச்சியில் இரண்டு நாள்கள் நடைபெற்ற கல்விக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் சார்பில் திருச்சியில் இரண்டு நாள்கள் நடைபெற்ற கல்விக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இக்கண்காட்சியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன் அடைந்தனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள கலையரங்கம் திருமண மண்டப வளாகத்தில் 11ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விவசாயம், வேளாண்மை, கட்டடக்கலை, தொழில்நுட்பம், கணினி வரைகலை மற்றும் அனிமேஷன், அச்சுத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழக அளவில் சிறந்து விளங்கும் கல்லூரிகள், வெளிநாட்டில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் வழங்கும் நிறுவனங்கள், நீட் தேர்வுக்கான பயிற்சிகளை வழங்கும் மையம் போன்றவை கண்காட்சியில் தங்கள் அரங்குகளை அமைத்திருந்தன.
இந்த அரங்குகளில் இருந்த கல்வியாளர்கள் தங்கள் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகள், புதிய படிப்புகள், வேலைவாய்ப்புகளை அளிக்கும் படிப்புகள் குறித்த விளக்கங்களை கண்காட்சியைப் பார்வையிட்ட மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோரிடம் வழங்கினர். மேலும், தங்கள் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான விளக்கக் கையேடுகள் மற்றும் விண்ணப்பப் படிவங்களையும் வழங்கினர்.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: இரு நாள்கள் நடைபெற்ற கண்காட்சியை ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்து பார்வையிட்டதோடு, விளக்க கையேடுகள், விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர். மேலும், சில கல்வி நிறுவனங்கள் வழங்கும் கல்விக் கட்டணச் சலுகைகள், கல்வி உதவித் தொகைகள் குறித்த விவரங்களையும் மாணவ, மாணவிகள் கேட்டறிந்தனர்.
கண்காட்சியில் இலவசமாக வழங்கப்பட்ட கலந்தாய்வு கையேட்டில் எந்தெந்த பொறியியல் கல்லூரிகளில் என்ன என்ன படிப்புகள் உள்ளன போன்ற விவரங்கள் இடம் பெற்றிருந்தன. அது தங்களது உயர்கல்விக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர் மாணவ, மாணவிகள்.
ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு விழாவில், எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் ( மதுரை) லிமிடெட் திருச்சி கிளையின் முதுநிலை மேலாளர் நா. ரகு சுப்ரமணியன், வர்த்தகப் பிரிவு மேலாளர் செ. மீனாட்சிசுந்தர், விற்பனைப் பிரிவு மேலாளர் எஸ். கிரீஷ் உள்ளிட்டோர் அரங்குகளை அமைத்த கல்வி நிறுவனங்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினர்.