மருத்துவத் துறையில் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்
மருத்துவத் துறையில் சேவை மனப்பான்மையுடன் மருத்துவர்கள் செயல்பட வேண்டும் என்றார் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
மருத்துவத் துறையில் சேவை மனப்பான்மையுடன் மருத்துவர்கள் செயல்பட வேண்டும் என்றார் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 15 ஆவது பட்டமளிப்பு விழாவில், பங்கேற்று 100 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி, மேலும் அவர் பேசியது:
மாநில மக்கள் நல்வாழ்வுத் துறையை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு இணையாக ஒப்பிட்டுப் பார்ப்பதைவிட, வளர்ந்த நாடுகளுக்கு இணையாக ஒப்பிட்டு செயல்பட வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறுவார். அவரது கூற்றின்படிஇந்த துறை பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மருத்துவத் துறையில் நாம் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்.
மருத்துவம் பயின்று பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் மக்கள் வாழ்வில் ஒளியேற்றக்கூடியவர்கள். புதிய அத்தியாத்தை நீங்கள் படைக்க வேண்டும். பட்டம் பெற்றுள்ள மாணவர்கள்இன்னும் அதிக மேற்படிப்புகளைப் படிக்க வேண்டும். தமிழகத்துக்கு நீங்கள் சேவை செய்ய வேண்டும் என்றார் விஜயபாஸ்கர்.,
மாநிலச் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி சிறப்புரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநிலங்களவை உறுப்பினரும், திருச்சிபுறநகர் மாவட்டச் செயலருமான டி. ரத்தினவேல், மக்களவை உறுப்பினரும், திருச்சி மாநகர் மாவட்டச் செயலருமான ப.குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். சந்திரசேகர், எம்.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பட்டமளிப்பு விழாவில், கி. ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜி. அனிதா, குடும்ப நலத்துறை இணை இயக்குநர் சம்சாத் பேகம், துணை இயக்குநர்கள் ரவீந்திரன், எலிசபெத், சாவித்திரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.