பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகங்கள், ஆவின் அலுவலகங்கள் முன் மே 8-ல் போராட்டம் நடத்துவதென தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
திருச்சியில் திங்கள்கிழமை சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.எம். முனுசாமி தலைமையில் நடைபெற்ற மாநிலக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பசும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.28 லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ.35 லிருந்து ரூ.45 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
கால்நடைத் தீவனங்களை 50 சதவிகித மானியத்தில் வழங்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி பாலின் தரம், அளவு ஆகியவற்றை தொடக்கச் சங்கங்களில் பால் கொள்முதல் செய்யும் இடங்களிலேயே குறித்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டங்களிலும், ஆவின் அலுவலகங்கள் முன்பும் மே 8-ல் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் பொதுச் செயலர் கே. முகமது அலி, பொருளாளர் எம். சங்கர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தினர். நிர்வாகிகள் ராமநாதன், செல்லதுரை, ரவி, தாண்டவராயன் உள்ளிட்டோர் மாநிலக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.