திருச்சி மாவட்டம் திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் -அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த தமிழக ஆளுனர் யாக சாலை பூஜையில் கலந்து கொண்டார்.
திருவானைக்கா கோயில் 2 ஆம் கட்ட கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான யாக சாலை பூஜைகள் நடைபெற்றுவந்தது. இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்பு திருவானைக்கா கோயிலில் நடைபெற்று வரும் மகா கும்பாபிஷேக விழா யாகசாலைக்கு வருகை தந்தார்.
அங்கு, தமிழக ஆளுநரை கோயில் நிர்வாகத்தினர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர் தரிசனம் செய்து விட்டு மீண்டும் சுற்றுலா மாளிகைக்கு திரும்பினார். புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு திருவானைக்கா கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்கிறார். தமிழக ஆளுநர் வருகையையொட்டி கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.