வாத்தலை அருகே உள்ள தெற்கு சித்தாம்பூரில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முசிறி வட்டம், தெற்கு சித்தாம்பூரில் இரண்டு மாதங்களுக்கு முன், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். இறந்தவருடைய உறவுக்காரர்களர்களான வெளியூர்க்காரர்கள் இறப்பு நடந்த வீட்டுக்கு சீர்கொண்டு வந்தனர். அப்போது மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வழியில் பாதையை மறித்து குறுக்கே நின்றதால் இரு சமுதாயத்தினரிடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த முன்விரோதத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகார்களின்பேரில், வாத்தலை போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தெற்கு சித்தாம்பூரில் பதற்றம் நிலவுவதால் ஜீயபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.