அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் அதிகம்: கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி
அறிவியல் பட்டதாரிகளுக்கு அனு மின் நிலையங்கள், ஆராய்ச்சி மையங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன என்றார் கல்பாக்கம் இந்திராகாந்தி அணு மின் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி பி. வெங்கட்ராமன்.
அறிவியல் பட்டதாரிகளுக்கு அனு மின் நிலையங்கள், ஆராய்ச்சி மையங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன என்றார் கல்பாக்கம் இந்திராகாந்தி அணு மின் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி பி. வெங்கட்ராமன்.
திருச்சி தேசியக் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில், நோபல் அறிஞர் சர்.சி.வி. இராமன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அவர் பேசியது:
கடந்த சில ஆண்டுகளாகவே அறிவியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை என்ற தவறான தகவல்கள் பரவி வருகின்றன. அது தவறான கருத்து. அணுஆராய்ச்சி மையங்களில் விஞ்ஞானிகளுக்கு வேலைவாய்ப்புகள்
அதிகம். இன்று நானோ தொழில் நுட்பத்தில் அணு கதிர்வீச்சுகள் பயன்படாத துறைகள் என்பது மிக மிக குறைவு. ஆபத்து என்பதை விட கதிர் வீச்சுகள் பல்வேறு வகையில் நமக்கு பயன்பட்டு வருவதை பலரும் அறியவில்லை.
குறைந்த செலவில், அனைத்து வகையான பாதுகாப்புகளுடன், அதிகளவு மின்சக்தியை அணுமின் (ஆராய்ச்சி) நிலையங்கள் மூலம் தயாரித்து வருகிறோம். மின்சாரம் தவிர, தொழிற்சாலைகள், கப்பல்கள், பாதுகாப்புத்துறை, மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அணு ஆராய்ச்சி மையங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பட்டு வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேவையான எதிர்காலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ஆர். சுந்தரராமன், இயற்பியல் துறை பேராசிரியர் ஏ.டி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.