உற்பத்தி ஆலைகளில் ஆற்றல் சேமிப்பு அவசியம்: கருத்தரங்கில் வலியுறுத்தல்
இன்றைய சூழலில் சிமென்ட் ஆலைகள் மற்றும் இதர உற்பத்தி சார்ந்த அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆற்றல் சேமிப்பை அமல்படுத்த வேண்டியது
இன்றைய சூழலில் சிமென்ட் ஆலைகள் மற்றும் இதர உற்பத்தி சார்ந்த அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆற்றல் சேமிப்பை அமல்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது என இந்திய தொழில் கூட்டமைப்பின் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
சிமென்ட் ஆலைகள் மற்றும் உற்பத்தி துறையில் ஆற்றல் வாய்ந்த தொழில்நுட்பங்கள் எனும் தலைப்பில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், திருச்சியில் புதன்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது. கூட்டமைப்பின் திருச்சி மண்டல தலைவர் பி. ரகுராமன் வரவேற்றார்.
அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலை தலைமை நிர்வாகி ஸ்ரீதர், கூட்டமைப்பின் திருச்சி மண்டல துணைத்தலைவர் ஏ.எஸ்.அனந்தகிருஷ்ணன் ஆகியோர் கருத்தரங்க நோக்கம் குறித்து விளக்கிப் பேசினர்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆலோசகர் கிரன் பிரசாந்த் பேசியது: உற்பத்தித் துறையில் மின்சாரம், எரிபொருள் தேவையின் அதிகரித்து வரும் சூழலில் மாற்றுத் தீர்வை தேடி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிமென்ட் ஆலைகளில் எரிபொருளுக்கு மாற்றுவழிமுறைகளை கையாள வேண்டியது அவசியம்.
மக்காத குப்பைகளை எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலும் காக்கப்படுகிறது. ஏனெனில், பிளாஸ்டிக் கழிவுகளை சிமென்ட் ஆலைகளில் எரிக்கும்போது, ஆலையின் கொதிகலனில் உள்ள அதிக வெப்பத்தால் கரியமலவாயு வெளியேற வழியில்லை. பிளாஸ்டிக் கழிவுகளும் அழிக்கப்படுகின்றன. மின்சார பயன்பாட்டுக்கு சூரிய ஆற்றலை அதிகம் பயன்படுத்தலாம்.
இதேபோல, எந்தெந்த வகைகளில் ஆற்றலை சேமிக்க முடியும். சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்காமல், பசுமை சக்தியை அதிகரிக்கலாம் என்பது குறித்து உற்பத்தித்திறன் சார்ந்த ஆலைகள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றார்.
இக் கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளில் பெரு நிறுவனங்களின் அதிகாரிகள், உற்பத்தி திறன்சார்ந்த வல்லுநர்கள், மேலாளர்கள் விளக்கவுரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை இந்திய தொழில் கூட்டமைப்பின் திருச்சி மண்டல நிர்வாகிகள் செய்திருந்தனர்.