போலி விசாவில் வெளிநாடு செல்ல முயன்ற இளைஞர் கைது
போலி விசாவில் மூலம் மலேசியா செல்ல முயன்ற வேதாரண்யத்தைச் சேர்ந்த இளைஞரை திருச்சி விமான நிலைய போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
போலி விசாவில் மூலம் மலேசியா செல்ல முயன்ற வேதாரண்யத்தைச் சேர்ந்த இளைஞரை திருச்சி விமான நிலைய போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கீழக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் பிரபாகரன் (24). இவர், ஒரு முகவர் மூலம் மலேசியாவில் வேலைக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதற்கான விசா, விமான டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை அந்த முகவர் பெற்றுத் தந்துள்ளார். அதன்மூலம் பிரபாகரன், ஞாயிற்றுக்கிழமை மலேசியா செல்ல திட்டமிட்டிருந்தார். அதற்காக அவர் திருச்சி விமான நிலையம் வந்து, மலிண்டோ விமானத்தில் செல்ல காத்திருந்தார்.
அவரது பயண ஆவணங்களை பரிசோதித்த குடியேற்றப்பிரிவு போலீஸார், அவரது விசா போலியானது என்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் முகவர் தன்னை ஏமாற்றியதாக தெரிவித்தார். இதுகுறித்து புகாரின் பேரில் விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பிரபாகரனை திங்கள்கிழமை கைது செய்தனர்.