போலி கடவுச்சீட்டில் இலங்கை செல்ல முயன்ற தம்பதியை திருச்சி விமான நிலைய போலீஸார் கைது செய்தனர்.
மதுரை டிவிஎஸ் நகரைச் சேர்ந்தவர் சந்திரவதன் (49). இவரது மனைவி சித்ரா (48). இலங்கை குடியுரிமை பெற்றவர். இருவரும் திருப்பூர் வேலாயுதம்பாளையத்தில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் இருவரும், திருச்சியில் இருந்து விமானத்தில் புதன்கிழமை இலங்கைக்கு செல்ல முயன்றனர். இவர்களது கடவுச்சீட்டை அதிகாரிகள் சோதனை செய்ததில் போலி ஆவணங்கள் மூலம் தயாரித்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் திருச்சி விமானநிலைய காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக, போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைதுசெய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.