பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மன்னார்புரம் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட 100 ஒப்பந்தத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் மின்வாரியமே பணிக்கு அமர்த்தி, அவர்களுக்கு ரூ.380 தினக்கூலி வழங்க வேண்டும், மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், தனியாரிடம் மின் விநியோகத்தை ஒப்படைக்கக்கூடாது, மின்வாரியம் பொதுத்துறை நிறுவனமாக செயல்பட வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ.4000 கருணைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் துணைச் செயலர் ரங்கராஜன் தலைமை வகித்தார். திருச்சி பெருநகர் வட்டத் திட்டச் செயலர் செல்வராசு, டிபிபிஇஓ மாநிலத் துணைச் செயலர் இருதயராஜ் ஆகியோர் கோரிக்கையுரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலர் சம்பத் சிறப்புரையாற்றினர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.