திருச்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேலும் 29 புதிய பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் எஸ். வளர்மதி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு வடிவமைக்கப்பட்ட 471 புதிய பேருந்துகளின் இயக்கத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த புதன்கிழமை தொடக்கி வைத்தார். இதில், கும்பகோணம் கோட்டத்துக்கு 111 பேருந்துகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இங்கிருந்து திருச்சி மண்டலத்துக்காக 29 புதிய பேருந்துகள் வந்து சேர்ந்துள்ளன.
இந்த பேருந்துகளின் இயக்கத்தை தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இந்த பேருந்துகளானது அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மலைக்கோட்டை கிளை, துவாக்குடி, லால்குடி, ஜெயங்கொண்டம் ஆகிய கிளைகளுக்கு தலா ஒன்று, தீரன் நகர், துவரங்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், உப்பிலியபுரம் ஆகிய கிளைகளுக்கு தலா 2 வீதம் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கண்டோன்மென்ட் கிளைக்கு 7, மணப்பாறை கிளைக்கு 4, துறையூர் கிளைக்கு 3 வழங்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகள் திருச்சியிலிருந்து திருப்பூர், விழுப்புரம், தஞ்சாவூர், மதுரை, சேலம், பொள்ளாச்சி, திண்டுக்கல், வேளாங்கண்ணி, மணப்பாறை, வேலூர், சிதம்பரம், திருப்பூர், ஜெயங்கொண்டம், பழனி, கோவை, துறையூர், கே.கே. நகர் ஆகிய வழித்தடங்களில் செல்லும் வகையில் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகளை வழியனுப்பும் வைக்கும் நிகழ்ச்சியில், ஆட்சியர் கு.ராசாமணி, மாநிலங்களவை உறுப்பினர் டி. ரத்தினவேல், எம்எல்ஏக்கள் செல்வராஜ், பரமேஸ்வரி முருகன், போக்குவரத்துக் கழக பொது மேலாளர் குணசேகரன், கோட்ட மேலாளர் வேலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.