திருச்சியில் நெட்-செட்-பிஎச்.டி. ஆசிரியர்கள் சங்கத்தினர் பேரணி
தமிழ்நாடு நெட்-செட்- பிஎச்.டி. ஆசிரியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை தொடர் முழக்கப் பேரணியை நடத்தினர்.
தமிழ்நாடு நெட்-செட்- பிஎச்.டி. ஆசிரியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை தொடர் முழக்கப் பேரணியை நடத்தினர்.
உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுவதற்குத் தகுதியான நெட்-செட்-பிஎச்.டி. முடித்துள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டு முறையில் 50 சதவிகிதம் பதவி உயர்வு வழங்க வேண்டும். உதவிப் பேராசிரியர் பணி நியமனத்தில் கல்லூரி பணி அனுபவத்துக்கு 2 மதிப்பெண் வழங்குவதுபோல, பள்ளிப்பணி அனுபவத்துக்கும் ஆண்டுக்கு 2 மதிப்பெண் வழங்க வேண்டும்.
மாணவர்கள் நலன்கருதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுவதற்குரிய தகுதியான நெட்-செட்- பிஎச்.டி. முடித்துள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கூடுதலாக ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி ரவுண்டானாவில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.விஜய் தலைமையில் தொடங்கிய பேரணியில், பொதுச் செயலர் கோ. ரமேஷ், பொருளாளர் மு.ராஜாபாபு முன்னிலை வகித்தனர்.
மாநிலத் துணைத் தலைவர்கள் கே.பிரபாகரன், ஞானபால்ராஜ், இணைச் செயலர்கள் எஸ். ஹரிநாராயணன், ஏ. ஆஷாகனி, சட்டச் செயலர்கள் கர்ணன், வி.கிருஷ்ணன், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சங்கம் ஹோட்டல் சாலை, ராஜா காலனி வழியாகச் சென்ற பேரணி ஆட்சியரகச் சாலையில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.