வழக்கு விசாரணைக்காக தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் உள்ளிட்ட 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகினர்.
திருச்சியில் கடந்தாண்டு அக்டோபர் 12ஆம் தேதி தேமுதிக சார்பில், நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, காந்திசந்தை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாகவும், உரிய அனுமதி பெறாமல் நிகழ்ச்சியை நடத்தியதாகவும் அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் உள்ளிட்ட 7 பேர் மீது திருச்சி மாவட்ட 5 ஆவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு, செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது எல்.கே. சுதீஷ், கணேசஷ், வில்சன், அலங்கராஜ், சிவக்குமார், நூர்முகமது, ராம் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கு விசாரணையை செப்டம்பர் 14ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி நாகப்பன் உத்தரவிட்டார்.
இதையடுத்து, நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த வந்த சுதீஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பொதுமக்களுக்கு உதவிகள் செய்ய வந்த நிகழ்வை , இடையூறு எனக்கூறி தேமுதிக மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டில் அவர் பேசுவார் . தேர்தல் கூட்டணி குறித்து, தலைமைக் கழகம் முடிவெடுக்கும் என்றார்.