ஆன்மிகமும், கர்நாடக சங்கீதமும் பிரிக்க முடியாதவை என்றார் சிட்டி யூனியன் வங்கி முன்னாள் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன்.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற ஷேக் சின்னமௌலானாவின் 20ஆம் ஆண்டு நினைவு புகழஞ்சலி விழாவில் அவர் மேலும் பேசியது: இசைத்துறையில் கர்நாடக சங்கீதம் வளர்ப்பதில் மகத்தான பணியை மேற்கொண்டு, அதில், பல்வேறு விருதுகளை பெற்ற ஷேக் சின்னமௌலானா குடும்பம் தொடர்ந்து இசை துறையில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
அந்த வகையில், திருச்சி, தஞ்சாவூர் கோயில்களில் 16 ஆம் நூற்றாண்டுகளில் இருந்தே வாசிக்கப்பட்டு வந்த மங்கள இசையான நாதஸ்வரம், தற்போது நிறுத்தப்பட்டு வருவதால் தொடர்ந்து வாசிக்க முன்னெடுக்க வேண்டும். ஆன்மிகமும், கர்நாடக சங்கீதமும் பிரிக்கமுடியாதவை. நாதஸ்வரம் இசைக்கு நிகர் எந்த இசையும் கிடையாது.
கேரளம், ஆந்திரத்தில் கர்நாடக சங்கீதம் இருந்தாலும் தமிழகம் தான் சிறந்த இசை வித்துவான்களை நிலைநிறுத்தி அதன் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. தென்னக பண்பாட்டு கலாசார விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்து கொண்ட கலைஞர்கள் ராமாயணத்தில் உள்ள கதாபாத்திரங்களை மையக் கருத்தாக கொண்டு நடித்தனர். ஆகவே இசைக்கு மதம், மொழி என்ற பாகுபாடு கிடையாது என்றார் அவர்.
நிகழ்வில் மூத்த நாதஸ்வரக் கலைஞர் கல்யாணபுரம் எம்.கணேசன், மூத்த தவில் கலைஞர் திருராமேஸ்வரம் டி.ஆர்.குஞ்சிதபாதம், இளம் நாதஸ்வரக் கலைஞர் திருக்கடையூர் டி.எம்.உமாசங்கர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
அமெரிக்கா மெம்பிஸ் நகர இந்திய கலாசார மையத்தின் உபதலைவர் பிரசாத் எஸ்.துக்கிராலா, சின்னமௌலானா நினைவு அறக்கட்டளை அறங்காவலர்கள் காசிம், பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.