ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குள் சென்று அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையில் வியாழக்கிழமை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணிபுரிபவர் சம்பத்குமா(43)இவர், கடந்த 10.4.2019 ஆம் தேதி அவரது அலுவலகம் அருகிலேயே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வாடகைக்கார் ஓட்டி வந்த திருச்சி அருகேயுள்ள சிறுகனூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மகன் கனகராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவரிடம் வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் இல்லை எனத் தெரிந்து அவர் மீது நடவடிக்கை மேற்கொண்டாராம். இதனையடுத்து கனகராஜ் வியாழக்கிழமை ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்று தன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கூறி திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றாராம்.
இதுதொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் சம்பத்குமார் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு- ஆய்வாளர் தயாளன், கனகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.