போலி ஆவணங்கள் பெற்று மலேசியாவிலிருந்து விமானத்தில் வந்த இருவரை திருச்சி விமான நிலையத்தில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மலேசியாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வந்த விமானப் பயணிகளின் ஆவணங்களை குடியேற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, மதுரை மாவட்டம் விளாங்குடி, கரிசல்குளம் அய்யர் தெருவைச் சேர்ந்த பாலுமகன் பிரபாகரன் (28), ராமநாதபுரம் மாவட்டம் கிளியூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த சி. அன்புமணி (35) ஆகிய இருவரும், தங்களது பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாக கூறி, அவசரகால சான்று (எமர்ஜென்சி சர்டிபிகேட் ) மூலம் டிக்கெட் எடுத்து வந்துள்ளனர்.
அவர்களது பாஸ்போர்ட் எண் குறித்து குடியேற்றப்பிரிவு போலீஸார் கணினியில் ஆய்வு செய்தபோது, அந்த பாஸ்போர்ட் தொலைந்தது தொடர்பாக ஏற்கெனவே அவசரகால சான்று பெற்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து புகாரின் பேரில் விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பிரபாகரன், அன்புமணி இருவரையும் கைது செய்தனர்.