இந்தியாவின் சிறந்த பாரம்பரியமிக்க திருத்தலத்துக்கான விருது ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு கிடைத்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு வகையிலான சுற்றுலா சிறப்பு மிக்க தலங்களுக்கு வெவ்வேறு தலைப்புகளில் இந்தியா டுடே வலைதளம் மூலம் தேசிய அளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் இந்தியாவின் மிகச்சிறந்த பாரம்பரியமிக்க சுற்றுலா தலம் என்று சுற்றுலாப் பயணிகள் அளித்த அதிகளவிலான வாக்குகளின் அடிப்படையில், சிறந்த பாரம்பரியமிக்க திருத்தலம் என்ற விருதுக்கு ஸ்ரீரங்கம் கோயில் தேர்வு செய்யப்பட்டது.
இதற்கான விருதை தில்லியில் நடைபெற்ற விழாவில், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமனிடம் மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் வழங்கினார்.
தேசிய அளவில் ஸ்ரீரங்கம் கோயில் விருது பெற்றமைக்கு இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலர் பணீந்திரரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.