சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில், உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ.1.08 கோடி கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் இக்கோயிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து, தங்கள் காணிக்கைகளைச் செலுத்தி செல்கின்றனர்.
அவ்வாறு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் கே.பி. அசோக்குமார் தலைமையில், உதவி ஆணையர்கள் உறையூர் வெக்காளியம்மன் கோயில் ஞானசேகரன், திருவானைக்கா கோயில் செ. மாரியப்பன், கோயில் மேலாளர் லட்சுமணன் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் ரூ.1.08 கோடி ரொக்கம், 2 கிலோ, 456 கிராம் தங்கம், 11 கிலோ, 988 கிராம் வெள்ளி, 235 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்தன. காணிக்கை எண்ணும் பணியில் மண்ணச்சநல்லூர் சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரி மாணவிகள், தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர் என்று திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.