திருச்சியில் 2 வயது பெண் குழந்தை புதன்கிழமை தொடர்ந்து 2 மணி நேரம் அம்பு எய்தி சாதனை முயற்சியை மேற்கொண்டது.
திருச்சி வயலூர் சாலை, சீனிவாசநகரைச் சேர்ந்த சகாய விஜய்ஆனந்த்- ஜயலட்சுமி தம்பதியின் 2 வயது மகள் ஆராதனா. தங்கள் குழந்தை ஏதாவது துறையில் சாதனை படைக்க வேண்டும் என எண்ணிய அவரது பெற்றோர், வில்வித்தை பயிற்சியை கடந்த 3 மாதங்களாக பிரத்யேகமாக அளித்தனர்.
இதைத் தொடர்ந்து , இக்குழந்தையின் சாதனை முயற்சி திருச்சி ரயில் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 10 மீட்டர் தொலைவிலுள்ள இலக்கை குழந்தை ஆராதனா தொடர்ந்து 2 மணி நேரம் அம்பு எய்தி, சாதனை முயற்சியை மேற்கொண்டது.
நிகழ்வில், வில்வித்தை சங்கப் பொதுச் செயலர்கள் தமிழகம் ஜெயகுமார்,புதுச்சேரி கோடீசுவரன், தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஆர்.நடேஷ், துணை வணிக மேலாளர் சந்திரசேகர், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் எமிலி ரிச்சர்டு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதற்கு முன்பு, சென்னையைச் சேர்ந்த 3 வயது சஞ்சனா, 8 மீட்டர் தொலைவில் இலக்கை நோக்கி அம்பு எய்தது சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இனி ஆராதனாவின் சாதனை நடுவர் குழுவால் அங்கீகரிக்கப்படும் நிலையில், இந்த சாதனை முறியடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.