திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மணப்பட்டி ஸ்ரீ தானாமுளைத்த மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி திங்கள்கிழமை பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
கடந்த மே 19-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதல், கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.
பெரிய மணப்பட்டி, சின்ன மணப்பட்டி, கிளவன்பட்டி, பண்ணையார் குளத்துப்பட்டி, குடையகவுண்டம்பட்டி, விராலிகாட்டான்பட்டி மற்றும் நெரிஞ்சிகாளப்பட்டி ஆகிய 8 கிராமங்களின் சார்பில் 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாவிளக்கு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
கிளவன்பட்டி மற்றும் மணப்பட்டியிலிருந்து மின் அலங்கார ரதத்தில் அம்மன் பவனி வர, வானவேடிக்கைகளுடன் மாவிளக்கு ஏந்தி புறப்பட்ட பெண்கள் செண்டை மேளம், தாரைதப்பட்டைகளுடன் மணப்பட்டி ஸ்ரீ தானாமுளைத்த மாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
கோயிலின் முகப்பில் கோலாட்டம், கும்மி என களைகட்டிய திருவிழாவில் குழந்தைகள் முதற்கொண்டு கும்மி அடித்து மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து, மாவிளக்கு வழிபாடு நடைபெற்றது. பின்னர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து திங்கள்கிழமை சின்ன மணப்பட்டி முனியப்பன் கோயிலில் இருந்தும், மணப்பட்டி பிள்ளையார் கோயிலில் இருந்தும் பால்குடம்,
அக்னிச் சட்டி, அலகு குத்துதலுடன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, செவ்வாய்கிழமை) பொங்கல், பெரிய படுகளம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று இரவு கரகம் களைதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.