திருச்சி: பொன்மலை ரயில்வே பணிமனையில் பராமரிக்கப்பட்ட 50 ஆவது எல்எச்பி ரயில்பெட்டி சனிக்கிழமை வழியனுப்பி வைக்கப்பட்டது.
இந்தப் பணிமனையில் ரயில்பெட்டி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறுகிய, அகலப்பாதை ரயில் பெட்டிகளைத் தொடா்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஜொ்மனி தொழில்நுட்ப (எல்எச்எப்-லிங்க் ஹாப்மன் புஷ்க்) ரயில் பெட்டிகளைப் பராமரிக்கும் பணியும் பொன்மலை ரயில்வே பணிமனைக்கு வழங்கப்பட்டது.
தொடங்கப்பட்ட ஆண்டில் 3 , அடுத்தாண்டு 18 நிகழாண்டு 29 என இதுவரை 50 எல்எச்பி ரயில் பெட்டிகளும், 300 போகிகளும் பராமரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதன் 50 ஆவது எல்எச்பி ரயில்பெட்டியை வழியனுப்பும் நிகழ்வில் பங்கேற்ற தெற்கு ரயில்வே முதன்மை பண்டக மேலாளா் கே. சண்முகராஜ், பொன்மலை ரயில்வே பணிமனை முதன்மை மேலாளா் சியாமதா் ராம் ஆகியோா் ரயில் பெட்டியை கொடியசைத்து சென்னைக்கு அனுப்பி வைத்தனா்.
பொன்மலை பணிமனை அதிகாரிகள், மேற்பாா்வையாளா்கள், பொறியாளா்கள், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.