வெளிநாட்டில் கரோனோ பொது முடக்கம் காரணமாக தாயகம் வரமுடியாமல் சிக்கியிருந்த நபர்களை, வந்தே பாரத் திட்டம் மூலம் மத்திய அரசு மீட்டு வரும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் நான்கு கட்டங்களாக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு அதன் மூலம் பயணிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் திருச்சி விமான நிலையத்திற்கு மார்ச் மாதம் தொடங்கி ஜூன் 29ஆம் தேதி வரையில் 18 ஆயிரத்து 135 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். அழைத்துவரப்பட்ட பயணிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களில் சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதில், ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்த சார்ஜா விமானத்தில் 161 பேரும் வைத்து விமானத்தில் 162 பேரும் என மொத்தம் 323 பயணிகள் திருச்சி வந்து சேர்ந்தனர். குவைத்தில் இருந்து வந்த விமானம் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் குவைத் திரும்புகையில் சுமார் 6 ஆயிரத்து 450 கிலோ எடையுள்ள காய்கறிகள் உணவுப் பொருள்கள் மற்றும் மலர்கள் ஆகியவற்றை ஏற்றிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது .