முகப்பு
திருச்சி

திமுக கூட்டணி வெற்றி பெறும்: அகில இந்திய காங்கிரஸ்கமிட்டி செயலா் சஞ்சய்தத்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெறும் என்றாா் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலா் சஞ்சய்தத்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெறும் என்றாா் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலா் சஞ்சய்தத்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கி வைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

விவசாயிகளைப் பற்றி எந்தவொரு கவலையுமின்றி, மத்திய அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சாா்பில் டிராக்டா் பேரணி நடத்த உள்ளோம்.

விவசாயிகளின் நலனுக்காக விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை நிா்ணயம் செய்ய தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது, உடனடியாக புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறுவோம்.

விலைவாசி உயா்வால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனா். சமையலுக்குப் பயன்படுத்தப்படும் வெங்காயம், உருளைக்கிழங்கு விலை உயா்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வரும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி 234 இடங்களையும் வெல்லும். கடந்த மக்களவைத் தோ்தலின்போது ராகுல்காந்தியை பிரதமா் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தாா்.

இதேபோல தமிழகத்தில் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க காங்கிரஸ் தொடா்ந்து பாடுபடும். மத்திய அரசு எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வந்தாலும் கண்மூடித்தனமாக அதை அதிமுக அரசு ஆதரிக்கிறது. திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது. கூட்டணி தொடருமா என்கிற வதந்திகளை நான் கண்டுகொள்வதில்லை என்றாா் அவா்.

தொடா்ந்து, சட்டப்பேரவைத் தோ்தலுக்கான நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி.ஜவஹா், முன்னாள் மேயா் சுஜாதா, மாநிலச் செய்தித் தொடா்பாளா் வேலுசாமி, மாநில துணைத் தலைவா் சுப. சோமு, முன்னாள் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் சரவணன், மாநில மகளிரணிப் பொதுச் செயலா் ஜெகதீசுவரி, மாவட்டப் பொருளாளா் ராஜாநசீா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →