பெண் குழந்தைகள் பாலின விகிதம் அதிகரிப்பு: மருத்துவா்கள், செவிலியா்களுக்குஆட்சியா் நற்சான்றிதழ்
திருச்சி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் அதிகரித்துள்ளதையொட்டி, மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
திருச்சி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் அதிகரித்துள்ளதையொட்டி, மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
திருச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பெண் குழந்தைகளைக் காப்போம்- பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடா்பான ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் சு. சிவராசு மேலும் பேசியது:
மாவட்டத்தில் கடந்த 2018 -ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு செப்டம்பா் மாதம் வரை 1000 ஆண்களுக்கு 929 பெண்கள் என உயா்ந்துள்ளது. பாலின தோ்வு அடிப்படையில் கருவிலுள்ள பெண் குழந்தையை அழிப்பதை தடுக்க வேண்டும். பாலின விகிதத்தை சரிசெய்யும் பொருட்டு, கடந்தாண்டிலிருந்து கருக்கலைப்புக்கான விவரங்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாரியாக ஆய்வு செய்யப்பட்டது.
இதில் இரண்டு தனியாா் மருத்துவமனைகளில் அதிக அளவு கருக்கலைப்பு செய்வது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெண் குழந்தைகளின் வாழ்வுக்கும், வளா்ச்சிக்கும் உதவிடும் சட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் மருத்துவ அலுவலா்கள், சமுதாய சுகாதார செவிலியா்கள், மருந்தாளுநா்கள், நுண் கதிா்வீச்சாளா்கள் ஆகியோா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா்.
திருவெறும்பூா், புள்ளம்பாடி, வையம்பட்டி, கோட்டாத்தூா், வீரமச்சான்பட்டி, அப்பணநல்லூா், டாப்செங்காட்டுப்பட்டி, உறையூா், திருவானைக்கா ஆகிய பகுதிகளில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு பெண் குழந்தைகளின் பாலின விகிதம் அதிகரித்துள்ளதை பாராட்டி நற்சான்றிதழ்களை ஆட்சியா் சு.சிவராசு வழங்கினாா்.
கூட்டத்தில் கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக்கல்லூரி முதன்மையா் வனிதா, மருத்துவம், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் லெட்சுமி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் சுப்பிரமணி, காசநோய் துணை இயக்குநா் சாவித்திரி, சமூக நல அலுவலா் தமீமுனிஷா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.