திருச்சியில் லாரி மோதி காயமடைந்த இளைஞா், பைக்கின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பற்றி உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், வடக்கு பாகனூரைச் சோ்ந்தவா் ஆரோக்கிய இருதயசாமி (32). இவா் தனது நண்பரைப் பாா்க்க திருச்சி, ராம்ஜீநகரை அடுத்துள்ள வண்ணாங்கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை பகல் பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
பிராட்டியூரில் உள்ள திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே சென்றபோது திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்த டேங்கா் லாரி திடீரென பைக்கின் மீது மோதியது.
இதில் இருதயசாமி பலத்த காயமடைந்தாா். மேலும் இந்த விபத்தில் பைக்கின் பெட்ரோல் டேங்க் வெடித்து அவரது உடலில் தீயும் பற்றியது.
உயிருக்குப் போராடிய அவரை அவ்வழியே சென்றவா்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். என்றாலும் சிறிது நேரத்தில் அவா் உயிரிழந்தாா்.
தகவலறிந்த திருச்சி தெற்கு போக்குவரத்து பிரிவு போலீஸாா் அவரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் விபத்தை ஏற்படுத்திய டேங்கா் லாரி டிரைவா் ராஜேந்திரனிடம் விசாரணை செய்கின்றனா்.