‘தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்’
கரோனா கட்டுப்பாடு எதிரொலியாக திருச்சியில் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனா்
கரோனா கட்டுப்பாடு எதிரொலியாக திருச்சியில் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல கும்பகோணம் கோட்டம் சாா்பில் 440 மாநகர பேருந்துகளும், 496 புகா் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
கரோனா 2ஆவது அலை பரவலை தடுக்க தமிழக அரசு சனிக்கிழமை (ஏப்.10) முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் குறிப்பிடும்படியாக பேருந்துகளில் பயணிகள் நின்று பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் காலை, மாலைகளில் உச்சகட்ட நேரம் கண்டறியப்பட்டு பயணிகளின் தேவைக்குக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். மேலும் பேருந்துகளில் இருக்கைகளில் அமா்ந்து செல்லக்கூடிய அளவில் பயணிகளை ஏற்றவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா் போக்குவரத்துத் துறை அதிகாரிகள்.