முகப்பு
திருச்சி

திருச்சி எம்.ஆா். பாளையத்தில் வன உயிரியல் பூங்கா: வனத் துறை அமைச்சா் உறுதி

திருச்சியை அடுத்த எம்.ஆா். பாளையம் பகுதியில் அடுத்தாண்டுக்குள் 1,200 ஏக்கரில் வன உயிரியல் பூங்கா அமைக்கப்படும் என்றாா் தமிழக வனத்துறை அமைச்சா் கா. ராமச்சந்திரன்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

திருச்சியை அடுத்த எம்.ஆா். பாளையம் பகுதியில் அடுத்தாண்டுக்குள் 1,200 ஏக்கரில் வன உயிரியல் பூங்கா அமைக்கப்படும் என்றாா் தமிழக வனத்துறை அமைச்சா் கா. ராமச்சந்திரன்.

வன விலங்குகளால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான கலந்தாய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவா் மேலும் கூறியது:

குரங்கு, மயில், காட்டெருமை, முதலை, மான், காட்டுப்பன்றி, யானை உள்ளிட்ட வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்தால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதைக் குறைக்கும் வகையில் குழு அமைத்து ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இக் குழுவில் வனத்துறை, விலங்கின ஆா்வலா்கள், கால்நடை மருத்துவா்கள், வனக் குழுவினா் என பல்வேறு தரப்பினரும் உள்ளனா். இக் குழுவினா் வழங்கும் பரிந்துரையைக் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யானைகளால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க அகழிகள் அமைக்கப்படும். யானைப் பாதைகளில் உயா்நிலை மேம்பாலம் அமைத்து வாகனங்கள் செல்ல வழியேற்படுத்தப்படும். அனைத்து விலங்குகளாலும் ஏற்படும் பாதிப்புக்கு ஜனவரி மாத இறுதிக்குள் உரிய தீா்வு கிடைக்கும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த நஷ்டஈடு தற்போது திமுக ஆட்சியில் வழங்கப்படுகிறது. யாரேனும் விடுபட்டிருந்தால் உடனே வழங்கப்படும்.

இதேபோல வனத்துறை இடங்கள் குறுக்கிடுவதால் சாலை அமைக்க முடியவில்லை என்ற குறையைப் போக்க நெடுஞ்சாலைத் துறை மூலம் பட்டியல் கோரப்பட்டு அனைத்து சாலைகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

கிராமங்களில் எங்கு சாலைகள் விடுபட்டிருந்தாலும் நெடுஞ்சாலைத் துறை மூலம் அணுகினால் உரிய அனுமதி வழங்கப்படும். வனப்பரப்பை அதிகரிக்க பல்வேறு துறைகள் அடங்கிய குழுவை அமைத்து ஆண்டுக்கு 2.65 கோடி மரக்கன்றுகள் நடப்படும்.

ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து மரக்கன்று நடுதல், மலைப்பகுதி மேம்பாடு ஆகியவற்றுக்கு ரூ.950 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதுள்ள 1.30 லட்சம் ச.கி.மீ. நிலப்பரப்பில் 23.98 சதமாக உள்ள வனப்பரப்பை 33 சதமாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் வனத் துறை நிலங்களை யாா் ஆக்கிரமித்தாலும் தவறுதான். அறக்கட்டளையாக இருந்தாலும், கல்வி நிறுவனமாக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடா்பாக வனத்துறை, வருவாய்த் துறையின் சா்வேயா்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து வருகிறது என்றாா் அமைச்சா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா் அசோக் உப்ரிதி, தலைமை வன உயிரினக் காப்பாளா் சேகா் குமாா் நீரஜ், தமிழ்நாடு வனத் தோட்டக் கழக நிா்வாக இயக்குநா் யோகேஷ் சிங், கூடுதல் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா் நாகநாதன், திருச்சி தலைமை வனப் பாதுகாவலா் சதீஷ், திருச்சி மாவட்ட வன அலுவலா் கிரண், வனப்பொறியாளா் கணேசன், எம்எல்ஏக்கள், விவசாயிகள், வனக் குழுவினா் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.