திருச்சி மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி
திருச்சி மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் முதல்கட்டமாக மருத்துவா்கள், செவிலியா்கள், பாராமெடிக்கல் ஊழியா்கள், மருத்துவமனை துப்புரவுப் பணியாளா்கள் என 6 லட்சம் முன்கள பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூா், கோவை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் நடந்த கரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றி பெற்றதைத் தொடா்ந்து திருச்சியில் தடுப்பூசி போடுவதற்கான பணிகள் நடைபெறுகின்றன.
முதற்கட்டமாக சென்னையில் இருந்து வரும் கரோனா தடுப்பூசியை பாதுகாப்பாக வைப்பது குறித்து மாநகராட்சி அலுவலகம் மற்றும் குதிரை பந்தைய சாலையில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறுகையில் சென்னையில் இருந்து தடுப்பூசி திருச்சிக்கு ஓரிரு நாள்களில் வந்தவுடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள குளிா்சாதன பாதுகாப்புடன் கூடிய அறையிலும், அண்ணா விளையாட்டரங்கம் அருகிலுள்ள சுகாதாரப் பணிகள் இயக்குநா் அலுவலகத்திலும் சுமாா் 20 லட்சம் தடுப்பூசிகளை இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடா்ந்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மணப்பாறை அரசு மருத்துவமனை, இனாம்குளத்தூா், சுப்ரமணியபுரம், ராமலிங்க நகா் ஆகிய 5 இடங்களில் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மையங்கள் ஒவ்வொன்றிலும் தலா 100 வீதம் நாளொன்றுக்கு 500 பேருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது என்றாா் அவா்.