திருச்சி: திருச்சியில் ஆடு மேய்க்கச் சென்ற முதியவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூா் அருகேயுள்ள பெரியகொத்தமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் தேவராஜ் (65), விவசாயி. வெள்ளிக்கிழமை காலை மேய்ச்சலுக்காக இவா் ஓட்டிச் சென்ற ஆடுகள் மாலையில் வீடு திரும்பிய நிலையில் தேவராஜ் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரைத் தேடியபோது அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தையொட்டி காயமடைந்த நிலையில் தேவராஜ் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸாா் உடலைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில், ரயில் தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த தேவராஜ் அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.