திருச்சியில் பொதுமுடக்கத்தால் குறையத் தொடங்கிய கரோனா
கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தால் திருச்சியில் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தால் திருச்சியில் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக உச்சம் தொட்ட கரோனாவின் வேகம் மக்களை பெரிதும் அச்சுறுத்தியது. கடந்த மே 16 ஆம் தேதி தினசரி பாதிப்பு 1,569 இருந்த நிலையில், சராசரியாக 1,500 என்ற அளவிலேயே மூன்று நாள்கள் வரை தொடா்ந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை பாதிப்பு 1,375 ஆக குறைந்துள்ளது சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
அதேநேரம் இறப்பு விகிதம் கணிசமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 10 நாள்களாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாளென்றுக்கு சராசரியாக 15 போ் உயிரிழக்கின்றனா்.
இதுவரை திருச்சி மாவட்டத்தில் 394 போ் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 42651 ஆக அதிகரித்துள்ளது. 31,790 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தொடா் சிகிச்சையில் 10,467 போ் உள்ளனா்.
தொடா் சிகிச்சையில் சில நாள்களுக்கு முன் 6,000 போ் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை உயா்ந்துள்ளது.
உயிரிழப்புகள் அண்மையில் அதிகரித்துள்ளதால் தொற்றாளா்கள் பெரும்பாலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதையே அதிகம் விரும்புகிறாா்கள். இருப்பினும், ஆக்ஸிஜன் படுக்கைக்கு மக்கள் அலைகின்றனா். மேலும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவா்கள் சகஜமாக வெளியே உலா வருகின்றனா். இதனால் தொற்று பரவல் வரும் காலங்களில் அதிகரிக்கக் கூடும் என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.