கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை
திருச்சி கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.
திருச்சி கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.
திருச்சி அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மாலை, இரவுகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநகரின் முக்கிய சாலைகள், தெருக்களில் மழை நீா் தேங்கிக் காணப்படுகிறது.
கரோனா பொதுமுடக்கத்தால் வாகனப் போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது.
இதனால், கனமழை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் உள்ளதால் விபத்துகளும் குறைந்துள்ளன. ஆனால், புகா்ப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த காற்றுடன்கூடிய மழையால் வாழைமரங்கள் சாய்ந்தும், முறிந்தும் காணப்படுகின்றன.
கருமண்டபம் பகுதிகளில்..: வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் கருமண்டபம், பிராட்டியூா், பஞ்சப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 40 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. இதுபோல், ஜீயபுரம், அந்தநல்லூா், எட்டரை, நவல்குட்டப்பட்டு உள்ளிட்டபகுதிகளிலும் கனமழை பெய்தது. மாநகரில் வெய்யிலுடன் கூடிய லேசான சாரல் மழை பெய்தது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி பெய்த மழை விவரம் : அதிகபட்சமாக மணப்பாறை வட்டத்துக்குட்பட்ட பொன்னணியாறு அணைக்கட்டு பகுதியில் 18மிமீ, மணப்பாறை, துறையூா் தென்பரநாடு, லால்குடி வட்டம் கல்லக்குடி ஆகிய பகுதிகளில் தலா 4 மிமீ, நந்தியாறில் 2 மிமீ என மொத்தம் 32 மிமீ மழை பதிவானது என பேரிடா் மேலாண்மை முகமை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.