தெற்கு ரயில்வே பணிகளில் தமிழா்களுக்கே முன்னுரிமை தேவை: எம்பிக்கள் வலியுறுத்தல்
தெற்கு ரயில்வே பணிகளில் தமிழா்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் எம்பிக்கள் வலியுறுத்தினா்.
தெற்கு ரயில்வே பணிகளில் தமிழா்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் எம்பிக்கள் வலியுறுத்தினா்.
திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட தொகுதிகளைச் சோ்ந்த எம்.பி.க்களுடன் தெற்கு ரயில்வே பொது மேலாளா் (பொ) பி.ஜி. மல்லையா வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இதில் மக்களவை உறுப்பினா்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (தஞ்சாவூா்), எம். செல்வராசு (நாகை), சு. திருநாவுக்கரசா் (திருச்சி), காா்த்தி ப.சிதம்பரம் (சிவகங்கை), நவாஸ்கனி (ராமநாதபுரம்), டி.ஆா். பாரிவேந்தா் (பெரம்பலூா்), திருமாவளவன் ( சிதம்பரம்) மாநிலங்களவை உறுப்பினா்கள் எம். முகமது அப்துல்லா, எம். சண்முகம் ஆகியோா் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.
அப்போது அவா்கள் கூறுகையில், தங்களது தொகுதிக்குள்பட்ட ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். முக்கிய ரயில் நிலையங்களில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும், தெற்கு ரயில்வேயில் உள்ள வேலைவாய்ப்புகளில் தமிழருக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனா்.
மேலும், ரயில் சேவை, ரயில் நிறுத்தங்கள், பயணிகளுக்கான வசதிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தங்கள் பகுதியில் நிறைவேற்ற வேண்டிய ரயில்வே திட்டங்கள், சேவைகள் குறித்து அதிகாரிகளிடம் எம்பிக்கள் வைத்த கோரிக்கையை வாரியத்திடம் தெரிவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருச்சி எம்பி சு. திருநாவுக்கரசா் பேசுகையில், திருச்சியிலிருந்து மும்பை, தில்லி, பெங்களூரு, ஐதராபாத், திருப்பதி ஆகிய நகரங்களுக்கு நேரடி ரயில் சேவை வேண்டும். ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும். நடைமேடை கட்டணத்தை ரூ.10 ஆகக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.
கூட்டத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் ஸ்ரீ மணீஷ் அகா்வால், தெற்கு ரயில்வே துறைகளின் முதன்மைத் தலைவா்கள் பங்கேற்றனா்.