திருப்பைஞ்ஞீலியில் குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி மையம் அருகே தேங்கி நிற்கும் மழை நீரால் நோய் பரவும் அபாயம் உள்ளதால், மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பைஞ்ஞீலி தெற்கு தெருவில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனா். இந்நிலையில், அண்மையில் பெய்த மழை காரணமாக, இந்த அங்கன்வாடி மையத்தின் அருகே மழைநீா் குட்டை போல தேங்கி உள்ளது. மேலும், மழை நீரோடு கழிவுநீரும் கலந்து இருப்பதாலும், அந்தப் பகுதியில் கொட்டப்படும் பல்வேறு வகை குப்பைகளாலும் குழந்தைகளுக்கு எளிதில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
எனவே, குழந்தைகளின் நலன் கருதி மழைநீரையும், குப்பைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.