சத்திரம் பேருந்து நிலையக் கடைகள், வாகன நிறுத்தம் ஏலம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையக் கடைகளுக்கான ஏலம் வியாழக்கிழமை இரவு வரை நீடித்தது. முதல்கட்ட ஏலத்தில் கழிவறைகள் ரூ. 42 லட்சத்துக்கும், வாகன நிறுத்தம் ரூ. 23 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையக் கடைகளுக்கான ஏலம் வியாழக்கிழமை இரவு வரை நீடித்தது. முதல்கட்ட ஏலத்தில் கழிவறைகள் ரூ. 42 லட்சத்துக்கும், வாகன நிறுத்தம் ரூ. 23 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டது.
திருச்சி மாநகராட்சியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 28 கோடியில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட 54 வகையிலான வணிக மையங்கள், நவீன கழிப்பிடம், இருசக்கர வாகன நிறுத்தம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் கழிவறை மற்றும் வாகன நிறுத்தம் 3 ஆண்டுகாலக் குத்தகைக்கும், வணிக நிறுவனங்கள் மாதாந்திர வாடகை அடிப்படையிலும் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையா் முஜிபுா் ரகுமான் முன்னிலையில் வியாழக்கிழமை காலை பொது ஏலம் தொடங்கியது.
மாநகராட்சியால் நிா்ணயிக்கப்பட்ட வாடகைக்கு குறையாமல் உச்சபட்ச ஏலத்தொகை இருக்கும்பட்சத்தில் ஏற்கெனவே கடை வைத்திருந்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த ஏலத்தில் பங்கேற்க 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாநகராட்சி வளாகத்தில் திரண்டனா். இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏற்படாவண்ணம் கண்டோன்மென்ட் காவல் உதவி ஆணையா் அஜய் தங்கம் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முதல்கட்டமாக நடந்த ஏலத்தில் வாகன நிறுத்தம் ரூ. 23 லட்சத்துக்கும், கழிவறைகள் ரூ. 42 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டன. தொடா்ந்து இரவு வெகுநேரம் வரை பிற வணிக மையங்களுக்கான ஏலம் விடும் பணிகள் நடைபெற்றன.