பாஜக வேட்பாளர்கள் யார்? ஆலோசனையில் அண்ணாமலை பங்கேற்கவில்லை!
பாஜக வேட்பாளர்கள் தேர்வு ஆலோசனையில் அண்ணாமலை பங்கேற்காதது பற்றி...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை இறுதி செய்யும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகின்றது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையொப்பமான நிலையில், நேற்று தொகுதிகள் விவரம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மயிலாப்பூர், ராசிபுரம் (தனி), மொடக்குறிச்சி, தளி, ராமநாதபுரம், மானாமதுரை (தனி), உதகை, குளச்சல், அவினாசி, பத்மநாபபுரம், திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர் (மதுரை மாவட்டம்), மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர் (தனி), ராதாபுரம், நாகர்கோயில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை பாஜக அலுவலகத்தில் வேட்பாளர்களை இறுதி செய்யும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகின்றது.
பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில மூத்த தலைவர்கள் கலந்துகொண்டிருக்கும் நிலையில், அண்ணாமலை பங்கேற்கவில்லை.
இதனிடையே, அண்ணாமலை போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அரவக்குறிச்சி அல்லது கோவை சிங்காநல்லூர் தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.
இதன்மூலம், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.