முகப்பு
இந்தியா

தமிழ்நாடு திரும்பாத அண்ணாமலை! தில்லியில் என்ன நடக்கிறது?

பாஜக மேலிட முடிவுக்காக தில்லியில் அண்ணாமலை காத்திருப்பது பற்றி...

Updated On : 3 ஜூன் 2026, 10:54 am IST
அமித் ஷாவுக்கு புத்தகம் பரிசளித்த அண்ணாமலை - ஏஎன்ஐ
பகிர்:

தில்லி பயணம் மேற்கொண்ட அண்ணாமலை பாஜக தலைவர்களை நேற்று சந்தித்துப் பேசிய நிலையில், மீண்டும் சென்னை திரும்பாமல் அங்கேயே தங்கியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் அண்ணாமலைக்கு கருத்து வேறுபாடு இருந்த நிலையில், மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கவுள்ளதாக கடந்த ஒரு வாரமாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், சென்னையில் கடந்த திங்கள்கிழமை மாலை தில்லி புறப்பட்டுச் சென்ற அண்ணாமலை, நேற்று கட்சியின் தேசிய தலைவர் நிதின் நவீன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.

Advertisement

Advertisement

இந்த சந்திப்பின்போது, நிதின் நவீனிடம் பாஜகவில் இருந்து விலகுவதாக தனது ராஜிநாமா கடிதத்தை அண்ணாமலை வழங்கியதாகவும், இதுதொடர்பாக அமித் ஷாவிடம் விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோற்றதற்கான காரணம், கட்சியின் தான் ஒதுக்கப்பட்டது உள்ளிட்டவை குறித்து அவர் அறிக்கையாக நிதின் நவீனிடம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.

அண்ணாமலை நாளை (ஜூன் - 4) பிறந்த நாள் கொண்டாடும் நிலையில், அவரது அரசியல் கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், கட்சியின் மேலிட வேண்டுகோளை ஏற்று சென்னை திரும்பாமல், இன்னும் தில்லியிலேயே அண்ணாமலை தங்கியுள்ளார்.

பாஜகவின் மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து அன்றாட செய்தியாளர்கள் சந்திப்பு, ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் என தமிழக மக்களிடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் பாஜகவை கொண்டு சேர்த்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காக நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவராக பாஜக மேலிடம் நியமித்தது.

இத்தகைய சூழலில் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகினால் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பாஜக மேலிடத் தலைவர்கள் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக உட்கட்சிப் பூசல் தொடர்பாக ஆலோசிக்க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை பாஜக மேலிடம் உடனடியாக தில்லிக்கு அழைத்துள்ளது.

இதனிடையே, அண்ணாமலையை சமாதானப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இன்றைக்குள் இறுதி முடிவெடுக்கப்படும் என்றும், இரவுக்குள் அண்ணாமலை சென்னை திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Annamalai Has Not Returned to Tamil Nadu! What Is Happening in Delhi?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.