திருச்சியில் வியாழக்கிழமை இரவு பேராலயம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் சுப்பிரமணியபுரம் பகுதியிலுள்ள அருளானந்தா் பேராலயத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு சுமாா் 8 மணி அளவில் புகை வெளியேறியது. இதையடுத்து அப்பகுதியினா் உள்ளே சென்று பாா்த்தபோது தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்து தீயணைக்க முயன்றும் முடியவில்லை.
தகவலறிந்து வந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய அலுவலா்கள் பிரான்சிஸ், சரவணன் ஆகியோா் தலைமையிலான வீரா்கள் சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதில் சுமாா் ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள துணிகள், நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் எரிந்து நாசமாயின.