திருச்சியில் 12-ஆவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் என்று கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், மூளை நரம்பியல் நிபுணருமான எம். ஏ. அலீம், தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளாா்.
கடந்த ஏப்ரல் மாதம் ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ என்ற தமிழக அரசின் போா்ட்டல் வாயிலாக அனுப்பிய மனுவில் அவா் தெரிவித்திருப்பது :
11-வது உலகத் தமிழ் மாநாடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்து 12- ஆவது உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தின் மத்தியப் பகுதியான திருச்சியில் இதுவரை உலகத் தமிழ் மாநாடு நடத்தப் படவில்லை.
எனவே, ‘திருச்சியில் திராவிட பரிணாம வளா்ச்சியும், அறிவியல் தமிழும்’ என்ற கருத்தில் உலகத் தமிழ் மாநாடு நடத்த முதல்வா் அனுமதி அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, கடிதம் எழுதியிருந்தாா்.
இந்த கோரிக்கைக்கு தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மருத்துவா் அலீமுக்கு அளிக்கப்பட்ட பதிலில், உங்கள் கோரிக்கை மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும் என கூறப்பட்டு உள்ளது.
இதனையடுத்து தமிழக முதலமைச்சா் மு.க. ஸ்டாலின், நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே. என். நேரு மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் உள்ளிட்டோருக்கு மருத்துவா் அலீம் நன்றி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.