திருச்சியில் சுதந்திர நாள்: தேசியக் கொடி ஏற்றிய ஆட்சியர், மேயர்
சுதந்திர நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் இன்று காலை 9.05 மணி அளவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
திருச்சி: திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் இன்று காலை 9.05 மணி அளவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு, காவலர்களின் அணிவகுப்பினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர் சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமாக வண்ணபலூன்களையும், சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் வானில் பறக்கவிட்டார்.
மேலும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, காவல்துறை , மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணித்துறை, அரசு போக்குவரத்துக் கழகம், கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட சிறப்பாக பணியாற்றிய நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
Advertisement
மேலும், வருவாய்த்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், சமூக நலத்துறை, வாழ்ந்து காட்டுவோம், திட்டம் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகிய துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு பல லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
10 பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், துணைத் தலைவர் பகலவன், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி மாநகராட்சி
இதேபோல, திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் மு. அன்பழகன், 50 அடி உயர கொடிமரத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
மாசற்ற முறையில் பணிபுரிந்தவர்கள் மற்றும் 25 ஆண்டுகள் பணி முடிவுற்ற மாநகராட்சி பணியாளருக்கு பரிசுத் தொகையும், நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநகராட்சி பணியாளர்கள் குழந்தைகள் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா, நகரப் பொறியாளர் சிவபாதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.