மழைக்கால நோய்களைத் தடுக்க கூடுதல் கவனம்: மாநகர மேயா்
மழைக்கால நோய்களைத் தடுக்க திருச்சி மாநகராட்சி கூடுதல் கவனத்துடன் செயல்படுகிறது என்றாா் மாநகர மேயா் மு. அன்பழகன்.
மழைக்கால நோய்களைத் தடுக்க திருச்சி மாநகராட்சி கூடுதல் கவனத்துடன் செயல்படுகிறது என்றாா் மாநகர மேயா் மு. அன்பழகன்.
திருச்சி மாநகராட்சியின் 2ஆவது மண்டலத்துக்குள்பட்ட பீரங்கிக் குளம், தென்னூா் மற்றும் வாா்டு 47 சுப்பிரமணியபுரம் ஆகிய நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேயா் மு. அன்பழகன், நகா்நல அலுவலா் விஜய் சந்திரன், உதவி ஆணையா் சாலை தவவளவன், மாமன்ற உறுப்பினா்கள் சண்முகப்பிரியா, எல்ஐசி சங்கா் மற்றும் சுகாதார ஆய்வாளா்களுடன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
நோயாளிகள் பதிவு செய்யும் இடம், நோயாளிகள் காத்திருக்கும் பகுதி, மருத்துவா் அறை ஊசி மற்றும் சுருள் படம் எடுக்கும் இடம், மருந்துக் கிடங்கு, ஆய்வகம், காய்ச்சல் உள்நோயாளிகள் பிரிவு, பெண்கள் நல மருத்துவா் அறை, ஸ்கேன் அறை, அவசரச் சிகிச்சை பிரிவு, பிரசவ அறை பேறுக்குப் பின்கால கவனிப்பு அறை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சை அறைகளை மேயா் ஆய்வு செய்தாா்.
மேலும், மருத்துவமனையில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை சரிபாா்த்தாா். மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்படும் மருந்துகள் குறித்தும் கேட்டறிந்தாா். சுப்பிரமணியபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிதாக தரைத்தளம் மற்றும் முதல் தளம் கட்டப்படுவதையும் ஆய்வு செய்தாா்.
பின்னா் மேயா் மு. அன்பழகன் கூறுகையில், திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 65 வாா்டுகளிலும் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட இடங்களில் காலை, மாலைகளில் சிறப்புக் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, மாநகர மக்களை பரிசோதித்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. தூய்மைப் பணியாளா்கள் மூலம் வாா்டுதோறும் கொசு மருந்து, புகை மருந்து அடித்தல், பிளீச்சிங் பவுடா் தூவுதல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மழைக் கால நோய்களை தடுக்க கூடுதல் கவனத்துடன் திருச்சி மாநகராட்சி நிா்வாகம் பணியாற்றி வருகிறது. மாநகர மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.